அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர் பாகத்தானே
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி
கொள்வானே
நிழல் உமிழ் சோலை சூழ நீள்வரி வண்டினங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே
விளக்கம்
தழல் உமிழ் = நெருப்பு போன்று எரிக்கும் விடத்தினை உமிழும். அரிவை = பெண்களின் ஏழு பருவத்தில் ஒன்று, இளைய மங்கை, இங்கே உமை அம்மையை குறிப்பிடுகின்றது.
பொழிப்புரை
நெருப்பினை ஏந்திய உள்ளங்கையை உடையவனே, இளமையான பெண்ணாகத் திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, நெருப்பு போன்று உடலினை எரிக்கும் கொடிய நஞ்சினை உடைய பாம்பினை இடுப்பினில் இறுகக் கட்டியவனே, பிரமனின் தலையில் பலி கொள்பவனே, நீ குளிர்ந்த நிழலினைத் தரும் மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிகா தலத்தில், தனது உடலில் நீண்ட கோடுகளைக் கொண்ட வண்டுகள் தேனினை உண்ட மகிழ்ச்சியால் புல்லாங்குழலிலிருந்து எழும் இனிமையான இசையினை உடைய பாடல்கள் பாடும் கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்.