பாடல் 3:
ஓதமார் கடலின் விடம் உண்டவர்
ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம்
மாதொர் கூறர் மழு வலன் ஏந்திய
நாதர் போல் திரு நாகேச்சரவரே
விளக்கம்:
வலம் என்ற சொல் வலன் என்று திரிந்தது; ஆர்=பொருந்திய; ஓதம்=அலைகள்;
பொழிப்புரை:
அலைகள் நிறைந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு அனைவரையும் நஞ்சின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய பெருமான் பிரமன் முதலாய தேவர்கள் அனைவர்க்கும் முன்னமே தோன்றியவர்; அவர் உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர், மழு ஆயுதத்தை தனது வலது கையில் ஏந்தியவர் ஆவார். இவ்வாறு அனைவர்க்கும் தலைவராக விளங்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்