பாடல் 8:
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழியாவது
இது கண்டாய் வானோர்க்கு எல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ என்றும் அம்மானே
ஆரூர் எம் ஐயா என்றும்
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் சூழும்
வலம் செய்து ;தொண்டு பாடிக்
கதிர்மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே
என்றென்றே கதறா நில்லே
விளக்கம்:
உஞ்சு=உய்ந்து என்பதன் திரிபு; துன்று=நெருங்கிய, நெருக்கமாக
பொழிப்புரை:
நெஞ்சமே, நீ உய்வதற்கான நல்ல வழியினை நான் காட்டுகின்றேன்; இதனை மறவாமல் கடைப்பிடிப்பாயாக. தேவர்கள் தலைவனே, அரிய அமுதமே, ஆதியே என்றும்; எங்கள் தலைவனே, ஆரூர் ஐயனே என்றும் அவனைப் போற்றி, மலர்களை அவனது திருமேனி மேல் நெருக்கமாக இருக்குமாறு தூவி வணங்கி, அவன் உறையும் கோயிலை வலம் வந்து, திருக்கோயிலில் இறைபணிகள் செய்து, ஒளி வீசும் பிறைச்சந்திரனை சடையில் சூடியவனே என்றும், காலனுக்கும் காலனே என்றும், அடியார்கள் வேண்டியவை அனைத்தும் அளிக்கும் கற்பகமே என்று பலமுறை கதறுவாயாக