பாடல் 4
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படை உடையாய் போற்றி போற்றி
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
விளக்கம்:
உன்னுதல்=நினைத்தல்:
பொழிப்புரை:
பொன் போல் ஒளிரும் திருமேனியை உடையவனே, பூத கணங்களைப் படையாகக் கொண்டவனே, சிறப்பாக நிலை பெற்ற நான்கு வேதங்களாய் இருப்பவனே, மான் கன்றினை கையில் ஏந்தியவனே, உன்னை நினைத்து தியானிப்பவர் மெய்ப்பொருளாக உன்னை உணரும் வண்ணம் செய்பவனே, உலகுக்கு ஒப்பற்ற ஒரே தலைவனே, தலையில் வெண்பிறையை சூடியவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.