பாடல் 2:
உரவன் புலியின் உரி தோலாடை உடை மேல் பட நாகம்
விரவி விரி பூங் கச்சா அசைத்த விகிர்தன் உகிர் தன்னால்
பொரு வெங் களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
விளக்கம்:
உரவன்=வலிமை உடையவன்; விகிர்தன் என்பதற்கு எவராலும் தோற்றிவிக்கப் படாமல் தானே தோன்றியவன் என்றும் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. இவை இரண்டுமே இறைவனுக்கு பொருந்தி இருப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
மிகுந்த வலிமை உடையவனும், புலியினை உரித்து அதன் தோலினைத் தனது உடையாகக் கொண்டவனும், புலித்தோலாடையின் மேல் படமெடுக்கும் பாம்பினை இறுக கச்சாகக் கட்டியவனும், அந்த பாம்பினை பூமாலை அசைப்பது போன்று அசைப்பவனும், ஏனையோரிலிருந்து மாறுபட்டவனும் தனது நகத்தினால் போர்க்குணம் கொண்ட யானை பிளிறி அலறுமாறு அதன் தோலினை உரித்தவனும் ஆகிய பெருமான் புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு இரவும் பகலும் தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்