தினம் ஒரு தேவாரம்

123. ஓர் உருவாயினை - பாடல் 39--47

என். வெங்கடேஸ்வரன்

பாடல் வரிகள்: 

    ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும்
    மறை முதல் நான்கும்
    மூன்று காலமும் தோன்ற நின்றனை
    இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
    மறுவிலா மறையோர்
    கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
    கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
    அனைய தன்மையை ஆதலின் நின்னை
    நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஆறிலிருந்து இறங்குமுகமாக ஒன்று வரை எண்கள் வருகின்றன. ஆறு பதம் என்ற தொடர், பிரத்தி, பிரத்தியாகாரம், துல்லியம், துல்லியாதீதம், வித்தை அவித்தை ஆகியவற்றை குறிக்கின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். பதம் என்றால் மந்திரம் என்று பொருள். நமச்சிவாய மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களை பிரணவ எழுத்துடன் சேர்த்து ஆறுபதங்கள் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு பதங்களாக உள்ளவன் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து எழுந்தவை என்று கூறுவார்கள். உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும் என்று மணிவாசகர் கீர்த்தித் திருவகவலில் கூறுகின்றார். இந்த ஐந்து முகங்களிலிருந்து எழுந்த வேதங்களையும் ஆகமங்களையும் கற்பதை ஐந்தமர் கல்வி என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்த கல்வியாக இருப்பவனும் பெருமான் தான். 45ஆம் வரியில் உள்ள கவுணியன் என்ற சொல்லினை கம்+ உணியன் என்று பிரித்து பொருள் காண வேண்டும். கம்=பிரம கபாலம்;         
 
பொழிப்புரை:

ஐந்தெழுத்து மந்திரம் மற்றும் பிரணவ மந்திரங்களில் உள்ள ஆறு மந்திர எழுத்துகளாக உள்ளவனும், தனது ஐந்து முகங்களின் வாயிலாக சொல்லப்பட்ட ஆகமங்களாகவும் இருப்பவனும், நான்கு வேதங்களாக இருப்பவனும், கடந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களாக தோன்றுபவனும் பெருமானாகிய நீ தான். நீ பல காரணங்களை முன்னிட்டு இரண்டு வேறு வேறு உருவங்களாக, சிவனாகவும் சக்தியாகவும், காட்சி அளித்தாலும் இரண்டு உருவங்களும் ஒரு முழுமுதல் கடவுளாகிய உன்னையே உணர்த்துகின்றது. தனக்கு நேராக எவரும் இல்லாத பெருமையை உடையவனாக ஒப்பற்றவனாக நீ விளங்குகின்றாய். குற்றங்கள் ஏதும் இல்லாத மறையவர் குடியில் வந்தவனும் கழுமலம் எனப்படும் தலத்தில் பிறந்தவனும் கவுணிய கோத்திரத்தின் வழியில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தர் இயற்றிய இந்த பாடலின் தன்மையை, பெருமையை பிரமகபாலத்தில் பிச்சை ஏற்று உணவு உட்கொள்ளும் பரமன் அறிவான். அத்தகைய பெருமானின் உண்மைத் தன்மையை உள்ளவாறு உணர்த்தும் இந்த பாடலின் பொருளை உணர்ந்து நினைக்கும் வல்லமை படைத்த மாந்தர்கள், மீண்டும் இந்த நிலவுலகினுக்கு வருவதைத் தவிர்த்து பெருமானுடன் முக்தி உலகில் இணைந்து இருப்பார்கள்.

முடிவுரை:

சொற்களால் ஆகிய இரதத்தினில் பெருமானின் பெருமைக்கு உரிய பண்புகளையும் தன்மைகளையும் அமர்த்தி அழகு பார்த்த திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய அழகான பதிகம் இது. ஒவ்வொரு படியாக பல படிகளில் பெருமானின் பெருமையை உணர்த்தும் சம்பந்தர், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் பெருமானின் புகழினை பாடுவதால் அடையும் பயனையும், மந்திரச் சொற்களாக விளங்கும் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களையும் சொல்வதால் விளையும் பயனையும் பெறுகின்றனர்.

இரதபந்தம் என்ற வகையில் அமைந்தது என்று சொல்லப்படும் இந்த பதிகத்தை முன்மாதிரியாகக் கொண்டு திருமங்கை ஆழ்வார் குடந்தைப் பெருமாள் மீது ஒரு பாசுரத்தை இயற்றியுள்ளார். அருணகிரிநாதரும் இதனைப் போன்று ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். இந்த திருப்புகழ் பாடலில் அருணகிரிநாதர், ஞானசம்பந்தர் முருகப் பெருமானின் திருவவதாரம் என்றே கூறுகின்றார். பதினோராம் திருமுறையில் அமைந்துள்ள நக்கீரர் அருளிய ஒரு பதிகமும் இதே முறையில் அமைந்துள்ளது. இவ்வாறு பலரும் ஞானசம்பந்தரைப் பின்பற்றி பாடியதிலிருந்து இந்த அமைப்பு எந்த அளவுக்கு தமிழ் புலவர்களின் உள்ளத்தை கவர்ந்தது என்பதை நாம் உணரலாம். இந்த பதிகத்தை ஓதினால் முக்திநிலை வாய்க்கப் பெறும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அதனை உணர்ந்து நாமும் இந்த பதிகத்தை தினமும் ஓதி முக்தி நிலை அடையும் தகுதியை பெறுவோமாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT