359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை: இங்கிலாந்துக்கு 74 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, கேப்டன் ஜோ ரூட்டின் இரட்டைச் சதத்தால் 421 ரன்கள் குவித்து 286 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து, இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. திரிமான்னே 76 ரன்களுடனும், எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Advertisement
130 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.
எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காத நிலையிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து, திரிமான்னேவுடன் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இணைந்தார்.
திரிமான்னே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். ஆனால், சதமடித்த சிறிது நேரத்திலேயே 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், மேத்யூஸ் நிதானம் காட்டி விளையாடினார். மற்ற வீரர்கள் மேத்யூஸுக்கு ஒத்துழைப்பு தராமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை.
மேத்யூஸ் மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அந்த அணி 359 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 71 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளும், டோம் பெஸ் 3 விக்கெட்டுகளையும், சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 74 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.