4 நாள் போட்டி: வலுவான நிலையில் தெ.ஆ ஏ அணி!
நேற்று ரமீலா சதம் அடித்தார். இன்று குயிண்ட டி காக் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 542 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க ஏ அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளிடையிலான 4 நாள்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கேரளத்தின் வயநாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு அம்பாதி ராயுடு கேப்டனாக செயல்படுகிறார்.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டேன் விலாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 4 லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்த முறை கவனமாக விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ அணி, 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. பவுமா 55 ரன்களுடனும், டேன் பெய்டிட் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
Advertisement
2-வது நாளான இன்றும் தெ.ஆ ஏ அணி சிறப்பாக ஆடியது. 138. 5 ஓவர்களில் 542 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நேற்று ரமீலா சதம் அடித்தார். இன்று குயிண்ட டி காக் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 102 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். டேன் விலாஸ் 75 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அக்ஷர் படேல் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய ஏ அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் எடுத்தார்.