2013 ஐபிஎல் சீசனின்போது நடந்த ஸ்பாட் ஃபிக்ஸிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளன. அதனால் அடுத்த இரு சீசன்களில் அந்த அணிகளுக்குப் பதிலாக புணே மற்றும் ராஜ்கோட் நகரங்களை மையமாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் களமிறங்குகின்றன. புணே அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்ஜீவ் கோயங்காவின் நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியை இன்டெக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.
இன்று மும்பையில் நடந்த ஏலத்தில் தோனி, ரஹானே, ஸ்மித், டூபிளெஸ்ஸிஸ், அஸ்வின் ஆகியோரை புணே அணி தேர்வு செய்தது. ரெய்னா, ஜடேஜா, மெக்கல்லம், ஜேம்ஸ் ஃபாக்னர், டுவைன் பிராவோ போன்ற வீரர்கள் ராஜ்கோட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அடுத்த இரு வருடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-லில் ஆடமுடியாது என்பதால் சென்னை ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் உள்ளார்கள். இந்நிலையில் புணே அணிக்கு தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், சென்னை ரசிகர்கள், புணே அணியை தங்கள் அணியாக எண்ணத் தொடங்கியுள்ளார்கள்.
ராஜ்கோட் அணியில் ரெய்னா, ஜடேஜா, மெக்கல்லம், பிராவோ என 4 சிஎஸ்கே வீரர்கள் இருந்தாலும் புணே அணியில் தோனி உள்ளதால் சென்னை ரசிகர்களின் ஆதரவு பெற்ற அணியாக புணே உள்ளது. சமூகவலைத்தளங்களில் புணேவுக்கு ஆதரவாக பலரும் எழுதி வருகிறார்கள். தமிழ்நாட்டின் புதிய நகரமான புணேவுக்கு வாழ்த்துகள் என்று எழுதி புணேவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். மஞ்சள் நிற உடை, புணே அணிக்கே வழங்கப்படவேண்டும் என்பதும் பலருடைய கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.