சுனில் நரைன் விலகல்: சிக்கலில் மே.இ.தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியிருப்பதால், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியிருப்பதால், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் தொடரில் கொல்கத்தா அணி சார்பில் பங்கேற்றபோது அவரது பந்துவீச்சு மீது சந்தேகம் எழுந்தது. சோதனையின் முடிவில், அவர் பந்துவீச்சு முறையற்றதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
எனவே அவர் இந்திய, தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணங்களில் பங்கேற்கவில்லை. ஆனால், உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சுனில் நரைன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவர் தனது பந்துவீச்சை திருத்திக்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் உள்ளூர் தொடரில் சிறப்பாக பந்துவீசினார்.
இருப்பினும், அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் திரும்ப விரும்பவில்லை.
எனவே, உலகக் கோப்பையில் இருந்து சுனில் நரைன் விலகி விட்டதாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
"இன்னும் எனது பந்துவீச்சில் திருப்தி ஏற்படவில்லை. எனவே, அதற்கு முன் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் எனது நலன்களை கருதி 100 சதவீதம் நம்பிக்கை ஏற்படும் வரை அணிக்குத் திரும்புவதில்லை என முடிவெடுத்துள்ளோம்' என்று சுனில் நரைன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கீரன் பொல்லார்டு, டுவைன் பிராவோ ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் உலகக் கோப்பையை சந்திக்க உள்ள அந்த அணிக்கு, மாயாஜால பந்துவீச்சாளரான சுனில் நரைன் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.