போதிய வரவேற்பு இல்லாததால் சாம்பியன்ஸ் லீக் போட்டியைக் கைவிடுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து 2009ல் சாம்பியன்ஸ் லீக் போட்டியை ஆரம்பித்தது பிசிசிஐ. இரண்டு வார காலம் நடக்கும் இந்தப் போட்டியின்போது வீரர்கள் பங்கேற்பதற்கு எளிதாக சர்வதேசப் போட்டிகளையும் நடத்தாமல் பார்த்துக்கொண்டது ஐசிசி.
உலகின் முக்கிய கிரிக்கெட் கிளப்புகளைக் கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. ஆனால், அதற்குப் பெரிய வரவேற்பு இல்லாததால் இப்போது அந்தப் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
எனவே செப்டம்பர், அக்டோபரில் நடப்பதாக இருந்த இந்த வருட சாம்பியன்ஸ் லீக் போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதுபற்றி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிசிசிஐயின் செயலாளர் அனுராக் தாக்கூர். அவர் கூறியதாவது:
உலகம் முழுக்க நடக்கும் டி20 போட்டிகளுக்குக் கூடுதல் போட்டியாக சிறந்தமுறையில் சாம்பியன் லீக் தொடர் நடைபெற்று வந்தது. கடந்த 6 போட்டிகளிலும் பல திறமையாளர்கள் இதனால் பலன் அடைந்தார்கள். ஆனால் இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக ஆர்வம் இல்லை. இந்தப் போட்டியின் பங்குதாரர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவின்படி சாம்பியன்ஸ் லீக் போட்டியை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.