இந்தோனேசிய ஓபன்: காலியிறுதியில் சாய்னா தோல்வி
இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதி போட்டியில் தோல்வியடைந்தார்.
ஜகர்த்தா (இந்தோனேசியா): இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதி போட்டியில் தோல்வியடைந்தார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா 22-24, 11-21 என்ற நேர் செட் கணக்கில் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார்.
முதல் செட் ஆட்டத்தின் தொடக்கில் 7-13 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தார் சாய்னா. பின்னர் சுதாரித்து ஆடிய அவர் 19-16 என முன்னிலைப் பெற்றார். எனினும், கடைசி நேரத்தில் செய்த சில தவறுகள் காரணமாக அந்த செட்டை 22-24 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார் சாய்னா.
Advertisement
இரண்டாவது செட்டில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய உலக சாம்பியனான கரோலினா தொடர்ந்து புள்ளிகளை குவித்தார். இறுதியில் அவர் 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி, சாய்னாவை வீழ்த்தினார்.
சாய்னாவை தவிர அனைத்து இந்திய வீரர்களும் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், இந்தோனேசியா ஓபன் போட்டியில் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்துவிட்டது.