எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?
சோமாலியா தலைநகருக்குச் சென்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியது குறித்து..
சோமாலியா தலைநகர் மொகதிஷுவுக்குச் சென்ற எண்ணெய் கப்பலை அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவின் பெர்பெரா துறைமுகத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மொகதிஷுவை நோக்கி சென்ற எண்ணெய் கப்பலை, ஹஃபுன் மற்றும் பந்தர்பெய்லா இடையிலான கடல்பகுதியில் கடந்த புதன்கிழமை (ஏப். 22) அன்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதை உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் பிரிட்டன் ராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமானது எனவும், பந்தர்பெய்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய 6 நபர்கள் அந்தக் கப்பலை கடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், அந்தக் கப்பலில் பயணித்த மாலுமிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், மாலுமிகளை மீட்க வேண்டுமென உள்ளூர்வாசிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கடத்தல்காரர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.