முகப்பு
விளையாட்டு

சதுரங்க உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கார்ல்ஸனுடன் விளையாட இந்தியாவின் ஆனந்த் தகுதி பெறுவாரா? கேன்டிடேட்ஸ் போட்டி இன்று தொடக்கம்

2016-ம் ஆண்டுக்கான சதுரங்க உலகக்கோப்பை போட்டி, வருகிற நவம்பர் 11 முதல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.

Updated On : 11 மார்ச், 2016 at 12:42 PM
பகிர்:

2016-ம் ஆண்டுக்கான சதுரங்க உலகக்கோப்பை போட்டி, வருகிற நவம்பர் 11 முதல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.

தற்போதைய உலகக்கோப்பையைக் கையில் வைத்திருக்கும் நார்வே நாட்டைச் சார்ந்த மாக்னஸ் கார்ல்ஸன், தான் சாம்பியன் என்கிற முறையில், ஏற்கெனவே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டார். இவருடன் மோதுவதற்குத் தகுதியான வீரரைத் தேர்வு செய்வதற்கான உலக முன்னணி வீரரர்கள் 8 பேர் அடங்கிய கேன்டிடேட்ஸ் போட்டிகள், மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தற்போதைய உலகத் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இல்லாவிட்டாலும், கடந்த உலகக்கோப்பைப் போட்டியில் 2-வது இடம் வென்றவர் என்கிற அடிப்படையில், நேரிடையாக இந்த கேன்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்.

Advertisement

கடந்த உலகக்கோப்பை போட்டியில் முன்னிலை பெற்ற ரஷ்ய வீரர்கள் கர்ஜகின் மற்றும் பீட்டர் சிவிட்லர் ஆகியோரும் க்ரான்ட்ப்ரீ போட்டியில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அமெரிக்க வீரர்கள் நகமுரா மற்றும் கருணா, உலக மதிப்பீடு தரவரிசையில் முன்னிலையில் உள்ள பல்கேரியா வீரர் டபாலோவ், நெதர்லாந்து வீரர் அனஷ்கிரி மற்றும் போட்டியை நடத்துகிறவர்களின் நாமினியாக ஆர்மீனியா வீரர் ஆரோனியன் ஆகிய வீரர்கள் ஆனந்துக்குக் கடுமையான போட்டியாளர்களாக இருப்பர் எனக் கருதப்படுகிறது.

இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் மற்ற 7 வீரர்களுடன் இரண்டு முறை மோத வேண்டும். 14 ஆட்டங்கள் முடிவில் அதிகப் புள்ளிகள் பெறுபவர் முதலிடத்தைப் பெறுவார். இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத்தொகை, இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து முறை உலகக்கோப்பையை வென்ற ஆனந்த், கடந்த இரண்டு முறை உலகக்கோப்பை இறுதி ஆட்டங்களில் கார்ல்ஸனிடம் தோல்வியைச் சந்தித்தார். இந்த முறை கார்ல்ஸனுடன் இறுதிப் போட்டியில் மோத வேண்டும் என்றால், மாஸ்கோவில் இன்று தொடங்கும் கேன்டிடேட்ஸ் போட்டியில் முதலிடம் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆனந்த் உள்ளார். இன்றைய முதல் போட்டியில் பல்கேரியாவின் டபாலோவுடன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆனந்த் போட்டியைத் தொடங்குகிறார்.

இந்த கேன்டிடேட்ஸ் போட்டியில் ஆனந்த் வெற்றிபெற்று, கார்ல்ஸனை உலகக்கோப்பையில் எதிர்கொண்டு, 6-வது முறையாக உலகக் கோப்பையை வாங்கி, இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்திய செஸ் ரசிகர்கள் உள்ளனர்.

சி.சரவணன் (9976252800)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.