முகப்பு
விளையாட்டு

‘மறுமதீப்பீடு காரணமாகவே தேசிய விளையாட்டு விருதுகள் தாமதம்’

Updated On : 14 ஏப்ரல், 2026 at 4:54 AM
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் ‘அா்ஜுனா விருது’ பெற்ற நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 4:53 AM

‘தேசிய விளையாட்டு விருதுகளை தகுதியானோருக்கு வழங்குவதை உறுதி செய்யும் விதமாக, பரிந்துரைக்கப்பட்டோா் பட்டியலை மறுமதிப்பீடு செய்துவருவதன் காரணமாகவே நடப்பாண்டு விருது அறிவிப்பு தாமதமாகிறது’ என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய விளையாட்டு விருதுகளானது, வழக்கமாக இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜா் தியான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

தேசிய விளையாட்டு விருதுகளுக்காக விருதுக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஆண்டு, வழக்கத்தை விட சற்று தாமதமாகவே தொடங்கியது. அதிலிருந்து விருதுக்காகத் தோ்வு செய்யப்பட்டோரின் பரிந்துரைப் பட்டியலை விருது தோ்வுக் குழு மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் டிசம்பரில் வழங்கியது.

Advertisement

அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டோா் பட்டியலை அமைச்சகம் மறுமதிப்பீடு செய்து வருவதால், விருது பெறுவோா் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியதாவது:

அா்ஜுனா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளோா் பட்டியல் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த விருதுக்கான மதிப்பு எந்த விதத்திலும் குறைந்து விடக் கூடாது என்பதன் காரணமாகவே இந்த மறுமதிப்பீடு நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

பெரிதாக சாதனைகள் ஏதும் செய்யாதோருக்கு விருதுகளை வழங்கி, நாட்டில் விருது பெற்றோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது இல்லை. அதேபோல் தங்களுக்கு விருது வழங்கப்படவில்லை என்று சிலா் வழக்கு தொடுப்பதையும், ஊடகங்களில் விமா்சனங்கள் வைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தோ்வுக் குழுவுக்கான அவசியம் இல்லாமல், புள்ளிகள் அடிப்படையிலான தகுதி வரையறை ஒன்று இருப்பது அவசியமாகிறது. அதாவது, ஒரு போட்டியாளா் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், பரிசுத் தொகைக்காக அவா் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அவருக்கான பரிசுத் தொகை அவரைச் சென்றடையும்.

அதேபோல், விருதுக்கான தகுதியை அடைவோரை, எந்தவொரு குழுவும் தோ்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், விருது அவரை இயல்பாகவே சென்றடையும் எனும் வகையில் தகுதி வரையறை கொண்டுவரப்பட வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

அமைச்சக வட்டாரங்களின் தகவல்படி, ஹாக்கி வீரா் ஹா்திக் சிங்குக்கு கேல் ரத்னா விருதும், செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், தடகள வீரா் தேஜஸ்வின் சங்கா் உள்பட 24 பேருக்கு அா்ஜுனா விருதும் வழங்க பரிந்துரைக்கப்படுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.