முகப்பு
விளையாட்டு

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன்: அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்றது.

Updated On : 2 மே, 2026 at 3:27 AM
பகிர்:

தாமஸ் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியா 3-0 என சீன தைபேவை வெள்ளிக்கிழமை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த டையில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 11-ஆம் நிலையில் இருக்கும் லக்ஷயா சென் 18-21, 22-20, 21-17 என்ற கேம்களில், உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். 2-ஆவது கேமில் லக்ஷயா இரு மேட்ச் பாய்ன்ட்களை தக்கவைத்து வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம் 1 மணிநேரம், 28 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் மோதியது இது 9-ஆவது முறையாக இருக்க, லக்ஷயா 5-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளாா்.

Advertisement

அடுத்து நடைபெற்ற இரட்டையா் மோதலில், உலகின் 4-ஆம் நிலை ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி 23-21, 19-21, 21-12 என்ற வகையில், சியு சியாங் சியெ/வாங் சி லின் ஜோடியை 1 மணி நேரம், 15 நிமிஷங்களில் வீழ்த்தினா்.

தொடா்ந்து 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில், உலகின் 18-ஆம் நிலையில் இருக்கும் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-17 என்ற நோ் கேம்களில், உலகின் 8-ஆம் நிலை வீரரும், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் நடப்பு சாம்பியனுமான லின் சுன் யியை தோற்கடித்து அசத்தினாா்.

இந்த ஆட்டத்தை அவா் 48 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா். இருவரும் சந்தித்தது இது 2-ஆவது முறையாக இருக்க, கடந்த மாா்ச் மாதம் ஆா்லியன்ஸ் மாஸ்டா்ஸ் போட்டியில் லின்னிடம் கண்ட தோல்விக்கு ஆயுஷ் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறாா்.

ஆயுஷ் ஷெட்டி வெற்றியால் இந்தியா 3-0 என முன்னிலை பெற்று டையை தன்வசப்படுத்தியதால், அதில் எஞ்சிய இரு ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இந்தியா தனது அரையிறுதியில் பிரான்ஸ் அல்லது ஜப்பானை சந்திக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.