தீர்ந்தது குழப்பம்?: 4-ம் நிலை வீரருக்கான இடத்தைக் கைப்பற்றவுள்ள கே.எல். ராகுல்!
ஃபார்மில் உள்ள ராகுலை வீணாக்க யாருக்கு மனம் வரும்?
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கார்டிப் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களைக் குவித்தது.
லோகேஷ் ராகுல், தோனி இணைந்து அபாரமாக ஆடி சதமடித்தனர். ராகுல் 108, தோனி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 50 ஓவர்களில் வங்கதேச அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் 4-ம் நிலை வீரராக யாரைக் களமிறக்குவது என்கிற நீண்ட நாளாக இருந்த குழப்பத்துக்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக முதல் பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடவில்லை. இந்தச் சந்தர்பத்தை நன்குப் பயன்படுத்திக்கொண்டார் ராகுல். அந்த ஆட்டத்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த ராகுல், நேற்று நான்காம் நிலை வீரராகக் களமிறங்கி சதமடித்தார். இதனால் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. முதலில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராகுல் இந்திய அணியில் மாற்றுத் தொடக்க வீரராகவே தேர்வாகியுள்ளார். எனினும் விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 4-ம் நிலை வீரராக இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடி, தன் திறமையை நிரூபித்துவிட்டார் ராகுல்.
அதேசமயம் விஜய் சங்கரை 4-ம் நிலை வீரராகத் தேர்வு செய்தால் சில ஓவர்கள் பந்துவீசவும் அவர் பயன்படுவார் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவரையும் வரும் உலகக் கோப்பை ஆட்டங்களில் பரிசீலிக்கும் என்று தெரிகிறது. எனினும் ஃபார்மில் உள்ள ராகுலை வீணாக்க யாருக்கு மனம் வரும்? இந்தச் சூழலில் முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் அவரையே 4-ம் நிலை வீரராகக் களமிறக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.