தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் முதல் ஓவரிலேயே சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு பலனாக ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஜேஸன் ராய் மற்றும் ஜோ ரூட் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேஸன் ராய் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஜோ ரூட்டும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் இங்கிலாந்து அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது.
இதையடுத்து, கேப்டன் மார்கன் மற்றும் ஸ்டோக்ஸ் மீண்டும் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த பாட்னர்ஷிப்பிலும் இருவரும் அரைசதம் அடித்தனர். எனினும் மார்கனும் அரைசதம் அடித்த கையோடு 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடியும் 4-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய பட்லர் 18, மொயீன் அலி 3, வோக்ஸ் 13 என ஏமாற்றம் அளித்தனர்.
ஸ்டோக்ஸ் மட்டும் தனிநபராக கடைசி வரை போராடி வந்தார். இதனால், இங்கிலாந்து அணி 300 ரன்களைக் கடந்தது. இந்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 49-வது ஓவரின் கடைசி பந்தில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும், ஃபெலுக்வாயோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.