இலங்கை அணியில் ஒழுக்கம் தேவை: இடைக்கால பயிற்சியாளர் அதிரடி!
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒழுக்கம் முக்கியமென அதன் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் 16 பேர் இடம் பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை டி20 கேப்டனாக இருந்த ஸ்பின் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, கடந்த மாத டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை தொடக்க நிலையிலேயே வெளியேறியதை அடுத்து ராஜிநாமா செய்தார்.
ஏற்கெனவே கேப்டன்சி (தலைமைப் பண்பு) அனுபவம் உள்ள அசலங்கா, டி20 அணிக்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டு தொடக்கத்தில் வங்கதேசத்துடனான தொடரின்போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஹசரங்காவுக்கு இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டபோது, அசலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.
சனத் ஜெயசூர்யா இலங்கை வீரர்கள் தலைமுடையை ஒழுங்காக வெட்ட வேண்டும் எனவும் காதில் எதையும் அணியக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா கூறியதாவது:
நமது அணிக்கு பொதுவான ஒழுக்கம் தேவை. எனது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி ஒழுக்கமாக இருக்க விரும்புகிறேன். வயதில் குறைந்தர்வர்கள் சீனியர்களான நம்மைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் என்பது மக்கள் விரும்பும் விளையாட்டாக இருக்க வேண்டும். நாம் நன்றாக செய்தால் நமக்கு பின்னர் வருபவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். அதனால்தான் இந்த மாற்றங்களை செய்யவிருக்கிறோம். கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டாக தொடர விரும்புகிறேன்.
பொறுமையாகவும் திமிர்தனம் காட்டாமல் இருந்தால் நாம் தோல்வியடைந்தாலும் பெரிதாக விமர்சனங்கள் வராது. மக்களிடம் கிரிகெட்டுக்கு ஆழமான காதல் இருக்கிறது.
ரோஹித், கோலி, ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்குதான் நஷ்டம், நமக்கு மிகப்பெரிய லாபம் என்றார்.