சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து வங்கதேச வீரர் மஹ்மதுல்லா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச அணியின் மூத்த வீரரான ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்குப் பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான மஹ்மதுல்லா 2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரை 139 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 117.74 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2400 ரன்கள் எடுத்துள்ளார். ஆல் ரவுண்டரான மஹ்மதுல்லா 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மஹ்மதுல்லாவும் மற்றொரு வங்கதேச வீரர் ஷஹிப் அல் ஹசனைப் போல 20 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் முடிந்ததும் ஓய்வை அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு வங்கதேச அணி அறிவிக்கப்பட்டதால் இந்தத் தொடருக்கு பின்னர் ஓய்வை அறிவிக்க முடிவெடுத்துள்ளார்.
இந்திய தொடருக்கு முன்னதாக மஹ்மதுல்லாவின் எதிர்காலம் குறித்து பேசுவதாக வங்கதேச கேப்டன் ஷாண்டோ தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஷாண்டோ கூறுகையில், “மஹ்மதுல்லாவின் தேவை இந்தியாவுக்கு எதிரான தொடரில் மிகவும் முக்கியமானது. அவர் இதுபற்றி அணித் தேர்வர்களிடமும் கலந்துரையாடியிருக்கலாம்” என்றார்.
குவாலியரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மஹ்மதுல்லா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது போட்டி வருகிற அக்.9-ஆம் தேதி தில்லியிலும், 3-வது மற்றும் கடைசிப் போட்டி அக்.12 ஆம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. இது மஹ்மதுல்லாவின் கடைசிப் போட்டியாக இருக்கும்.
மஹ்மதுல்லா 2021 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் நாட்டுக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.