இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
டபிள்யுடிசி தொடரின் ஒரு பகுதியாக இந்தியா-நியூஸி. அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதில், முதல் டெஸ்ட் ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. நியூஸி. அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 231/3 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை சனிக்கிழமை தொடங்கியது.
சர்ஃப்ராஸ் கான்-ரிஷப் பந்த் இணைந்து அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சர்ஃப்ராஸ் கான் அதிரடியாக ஆடி தனது முதல் டெஸ்ட் சதத்தைப் 150 பதிவு செய்தார். நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் 99 ரன்களை விளாசி ஒரு ரன்னில் சதத்தை தவற விட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெளலிங்கில் நியூஸி. தரப்பில் மேட் ஹென்றி 3-102, வில்லியம் ஓரேர்க் 3-92 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை நியூஸி. அணி வீரர்கள் டாம் லத்தம்-டேவன் கான்வே தொடங்க வந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் நியூஸிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தை ஞாயிற்றுகிழமை தொடர்ந்தது. அந்த அணி, இந்திய அணி நிர்ணயித்த 107 ரன்கள் இலக்கை 27.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக எட்டிப்பிடித்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில் யங் 48, ரச்சின் ரவீந்திரா 39 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. அத்துடன் 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.