யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபையில் உள்ள ஐசிசி அகாதெமி திடலில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
சமீர் மின்ஹாஸ் அதிரடி
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 113 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஹமது ஹொசைன் 56 ரன்களும், உஸ்மான் கான் 35 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஃபர்கான் யூசஃப் 19 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளையும், ஹெனில் படேல் மற்றும் கிலான் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கனிஷ்க் சௌகான் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் சாம்பியன்
348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 26.2 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தீபேஷ் தேவேந்திரன் 36 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 26 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கிலான் படேல் 19 ரன்களும், ஆரோன் ஜியார்ஜ் 16 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அலி ராஸா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சையம், அப்துல் சுபன் மற்றும் ஹுசைஃபா அஹ்சான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.