பிசிசிஐ செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்வு!
பிசிசிஐ செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர், பொருளாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-யின் அடுத்த செயலர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பிசிசிஐ தரப்பில் அதன் செயலர் பொறுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பிக்க ஜனவரி 4 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த நிலையில், செயலர் பதவிக்கு வேறு விண்ணப்பிக்காததால், தேவஜித் சாய்கியா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
55 வயதான சாய்கியா அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கிரிக்கெட், சட்டம், நிர்வாகம் எனப் பன்முகத் திறன் கொண்டவர். இவரது கிரிக்கெட் வாழ்க்கை, ஒப்பீட்டளவில் குறுகியதாக இருந்தபோதிலும், முதல்தர கிரிக்கெட் வீரராகவே இருந்து வந்தார். கிரிக்கெட்டுக்குப் பிறகு, 28 வயதில் குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
ஏற்கனவே, பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலர், மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றதால், அந்த இடமும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு வேறு யாரும் விண்ணப்பிக்காத நிலையில், பிரப்தேஜ் சிங் பாட்டியா மட்டும் விண்ணப்பித்ததால் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.