முகப்பு
கிரிக்கெட்

அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்: வைபவ் சூர்யவன்ஷி

இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

Updated On : 6 ஜூலை, 2025 at 11:24 AM
வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே 3 போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நேற்று (ஜூலை 6) நான்காவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடி 52 பந்துகளில் அதிவேக சதம் விளாசி அசத்தினார். இளையோருக்கான ஒருநாள் போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் (13 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) எடுத்தார்.

200 ரன்கள் குவிக்க இலக்கு

இளையோருக்கான ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசி அசத்திய நிலையில், அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிடமிருந்து ஊக்கம் பெற்றேன். ஏனெனில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியதை நான் பார்த்தேன். சதம் மற்றும் இரட்டைச் சதம் விளாசிய பிறகு அவர் ஆட்டத்தை விட்டுவிடவில்லை. அணிக்காக மேலும் ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன். அடுத்த முறை 50 ஓவர் வரை களத்தில் நின்று விளையாட முயற்சி செய்வேன். நான் அதிகமாக ரன்கள் குவித்தால், அது கண்டிப்பாக அணியின் நலனுக்கு உதவும். ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்று விளையாடுவதில் கவனம் செலுத்துவேன் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி இளையோர் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 7) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

summary

Young batsman Vaibhav Suryavanshi has said that he will try to score 200 runs in the next match against England.

முழு கட்டுரையைப் படிக்க →