இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வீராங்கனைகள், பயிற்சியாளருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற மும்பையைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா மற்றும் ராதா யாதவுக்கு தலா ரூ. 2.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.
இதேபோல், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த மும்பையைச் சேர்ந்த அமோல் மஜும்தாருக்கு ரூ. 22.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில் இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது.
கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 37 கோடி பரிசுத் தொகையாக ஐசிசியும், பிசிசிஐ சார்பில் ரூ. 51 கோரி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிர அரசு சார்பில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் அனைவரும் மும்பைக்கு வரும்போது அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.