இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல்முறையாக தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு திடலில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் கில் களமிறங்கினர். கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.
அடிலெய்டு திடல் விராட் கோலியின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர் ஒருவர் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் மட்டும் அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து 975 ரன்கள் குவித்துள்ளதே இதற்கு காரணம்.
8 மாத இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பெர்த் ஒருநாள் போட்டியில் கடந்த 19 ஆம் தேதி களமிறங்கிய கோலி, டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இந்த நிலையில், அவரின் கோட்டையான அடிலெய்டு திடலில் இன்று மீள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் திடலுக்குள் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
ஆனால், 4 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்த கோலி, சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில், எல்பிடபள்யூ முறையில் டக்-அவுட்டானார்.
ஓய்வுபெறுகிறாரா கோலி?
டக்-அவுட் ஆனதைவிட அதன்பிறகு கோலியின் செயல்கள்தான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அவுட்டான பிறகு பெவிலியன் திரும்பிய கோலிக்கு ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர். இதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக தனது வலது கையை உயர்ந்தி அமைதியாக அசைத்துவிட்டுச் சென்றார் கோலி.
கோலியின் இந்தச் செயல் இயல்பானதா? அல்லது ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? என்ற விவாதம் இணையத்தில் தொடங்கியுள்ளது.
#KohliRetirement, #ViratKohli போன்ற ஹேஷ் டேக்குகள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.