காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகிய பிரதிகா ராவலுக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நாளை மறுநாள் முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்கவுள்ளன.
குவாஹாட்டியில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. அக்டோபர் 30 ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில், காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரின் நாக் அவுட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள பிரதிகா ராவலுக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. நாக் அவுட் போட்டிகளிலிருந்து விலகியுள்ள ராவலுக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் விளையாடுவதும் சந்தேகம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.