தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடவுள்ளதை சாய் சுதர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடவுள்ளதை சாய் சுதர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நாளை (ஏப்ரல் 8) நடைபெறும் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. தசைப் பிடிப்பு காரணமாக கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளையாடவில்லை. ரஷித் கான் அணியைக் கேப்டனாக வழிநடத்தினார். அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடவுள்ளதை தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் மிகவும் நன்றாக இருக்கிறார். தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டரில் யாரேனும் ஒருவர் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாடினால், அது அணிக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் மீதும் நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு இதே அணியோடு களமிறங்கி பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றோம். வெறும் இரண்டு போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன. எங்களது மிடில் ஆர்டர் பேட்டர்கள் போட்டியை வென்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.