ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்; சிஎஸ்கேவுக்கு சிக்கல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சிஎஸ்கே, அதன் பின் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஹைதராபாதில் நடைபெற்ற கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது.
ஹைதராபாதுக்கு எதிரான கடந்த போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
Advertisement
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 6 போட்டிகளில் 201 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே விலகியது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக 6-லிருந்து 12 வாரங்கள் தேவைப்படும். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அடுத்தப் போட்டியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.