19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடல் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
வேதாந்த் திரிவேதி அரைசதம்
முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி அரைசதம் கடந்தார். அவர் 98 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கனிஷ்க் சௌகான் 35 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். ஆர்.எஸ்.அம்பிரிஷ் 29 ரன்கள், விஹால் மல்ஹோத்ரா மற்றும் கிலான் படேல் தலா 21 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுபன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சையம் இரண்டு விக்கெட்டுகளையும், அலி ராஸா, அகமது ஹுசைன், மோமின் மற்றும் அலி ஹாசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்குத் தகுதி பெறும். அரையிறுதிக்குத் தகுதி பெற பாகிஸ்தான் அணி இந்திய அணியை நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். இலக்கை குறைந்த ஓவர்களில் துரத்திப் பிடித்து நல்ல ரன் ரேட்டில் இந்திய அணியை வீழ்த்த தவறும் பட்சத்தில், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்துவிடும்.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.