சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு டி20 போட்டிகளில் தன்னுடைய வேலையை மிகவும் எளிதாக்கியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் (பிப்ரவரி 7) தொடங்கியது. இந்த தொடரில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசி இந்திய அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.
இந்த நிலையில், அமைதியாக அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பு மிகவும் அழுத்தம் நிறைந்த தன்னுடைய பயிற்சியாளர் பணியை எளிதாக்கியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 வடிவிலான போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் என்னுடைய வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றிவிட்டார். அவர் அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தக் கூடியவர். ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் அணி வீரர்களிடம் மிகவும் நன்றாக பழகக் கூடியவர். அணியில் உள்ள வீரர்களிடத்தில் அவர் பேசும் விதம் மற்றும் அவர்களுடன் செலவிடும் நேரம் என அனைத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார். அணியின் பயிற்சியாளராக என்னுடைய வேலையை அவர் மிகவும் எளிதாக்கிவிட்டார் என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அதன் அடுத்தப் போட்டியில் வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி நமீபியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.