டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஓமன் முதலில் பேட் செய்தது.
வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
முதலில் விளையாடிய ஓமன் அணி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் முதலில் களமிறங்கிய ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அமீர் கலீம் 5 ரன்கள், கேப்டன் ஜதீந்திர் சிங் 5 ரன்கள், ஹம்மாத் மிர்ஸா 0 ரன், கரண் சோனாவாலே 0 ரன் மற்றும் வாசிம் அலி 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக விநாயக் ஷுக்லா 28 ரன்களும் (4 பவுண்டரிகள்), சூஃப்யான் மெஹ்முத் 25 ரன்களும் (2 பவுண்டரிகள்) எடுத்தனர். நதீம் கான் 20 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் வேகப் பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ரிச்சர்ட் நிகராவா, பிளெஸ்ஸிங் முஸராபானி மற்றும் பிராட் ஈவன்ஸ் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கேப்டன் சிக்கந்தர் ராஸா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அபார வெற்றி
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒமனை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரண்டன் டெய்லர் 31 ரன்களும், மருமானி 21 ரன்களும் எடுத்தனர்.
ஓமன் தரப்பில் சூஃப்யான் மெஹ்முத் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸ்ஸிங் முஸராபானிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.