ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு இரண்டு இந்தியப் பயிற்சியாளர்கள் மிகவும் உதவிகரமாக இருந்ததாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் நேற்று (பிப். 16) நடைபெற்ற லீக் சுற்றின் 30-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து சூப்பர் 8- சுற்றில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வீரர் பதும் நிசங்கா அதிரடியாக விளையாடி, 100 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் பந்தை அட்டகாசமாக பறந்து பிடித்திருந்தார் நிசங்கா.
வாழ்வா? சாவா? போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறித்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெய சூர்யா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆர். ஸ்ரீதர் எங்கள் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர், இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் விக்ரம் ரத்தோர். இவர் பேட்டிங் பயிற்சியாளர்; இவரும் இந்தியர்தான். உண்மையிலேயே இருவரும் நல்ல மனிதர்கள். பயிற்சியாளர் நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை அவர்கள் செய்வார்கள். இது ஃபீல்டிங்கிற்கு மிகவும் நல்லது.
ஐபிஎல் போட்டிகளின்போது அவர்கள் செயல்பட்ட அனுபவத்தால் வீரர்களுடன் நன்றாகப் பணியாற்றி வருகிறார்கள். நாங்கள் பேட்டர்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்திருக்கிறோம். சில நேரங்களில் பேட்டர்கள் பற்றி பயிற்சியாளர்கள் கவலையடைவது உண்டு. ஆனால், விக்ரம் மற்றும் ஸ்ரீதர் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 100 ரன்களைக் குவித்திருந்தனர். ஆனால், இலங்கை வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் கடைசி 12 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பதிரானாவின் அற்புதமான பந்துவீச்சும் நிசங்காவின் அதிரடியான சதமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.