டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சொதப்பி வரும் நிலையில், அவருக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இன்னிங்ஸின் தொடக்கத்தில் முடிந்த அளவுக்கு நேராக விளையாட வேண்டுமெனவும் பந்துவீச்சின் லைனுக்கு குறுக்கே பேட்டை வீச வேண்டாம் (அக்ராஸ் பேட்டிங்) எனவும் கூறியுள்ளார்.
இதை மட்டும் செய்யாதே...
இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகியுள்ளார்.
இதுவரை இந்த உலகக் கோப்பையில் 1 ரன் கூட எடுக்காமல் இருக்கிறார். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
அபிஷேக் சர்மா அழகான வீரர். ஆனால், அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிக சுமையைக் கூட்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடி இருந்தால் இந்தத் தொடரே வேறு மாதிரி இருந்திருக்கும்.
அவரிடம் பல விதமான ஷாட்டுக்கான திறமை இருப்பதால், அவர் சிறிது நேரம் எடுத்து விளையாடலாம்.
முதல் இரு ஓவர்களில் காத்திரு...
முதல் பந்திலேயே சிக்ஸரோ பவுண்டரியோ அடிக்க முயற்சிக்க வேண்டாம். தானாகவே அதற்கேற்ற பந்து வந்தால் அடிக்கலாம் பிரச்னை இல்லை. ஆனால், அவர் வேண்டுமென்றே பெரிய ஷாட்டை ஆடக்கூடாது.
முதலில் ஒரு ரன் எடுக்க வேண்டும். நான்கு பந்துகளில் ரன்கள் இல்லை என்றாலும் கவலையில்லை. அதை பின்னர் அவர் சரிசெய்து விடுவார். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா சற்று புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும்.
முதல் இரு ஓவர்களில் காத்திருந்து அதன்பிறகு அவர் தனது இயற்கையான ஆட்டத்தை ஆடலாம். முதல் ரன் எடுத்தாலே அனைத்தும் நன்றாக அமையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.