ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகன்..! யார் இந்த ஆகிப் நபி?
ரஞ்சி கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற ஜம்மு காஷ்மீர் வீரர் குறித்து...
ஜம்மு காஷ்மீர் வீரர் அணியின் ஆகிப் நபி தார் (29 வயது) ரஞ்சி கோப்பை 2025/26 சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி, தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
இந்த சீசனில் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடிய ஆகிப் நபி 60 விக்கெட்டுகளை எடுத்து ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ரூ.8.4 கோடிக்குத் தேர்வான ஆகிப் நபி
காஷ்மீரில் பாராமுல்லா எனும் நகரில் பிறந்த இவர் வலது கை வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார். கடந்த 2018/19 முதல் ஜம்மு காஷ்மீர் அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.8.4 கோடிக்குத் தேர்வாகியுள்ளார். பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கும் செய்யும் திறமைக் கொண்ட இவர் ஆல்ரவுண்டராக இருப்பது அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக, 160 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
ஒரு சீசனில் 60 விக்கெட்டுகள்
10 போட்டிகள் (17 இன்னிங்ஸ்களில்) 60 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் இரண்டாவது அதிகபட்சமாக உ.பி. மயங்க் மிஸ்ரா 59 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.
இந்த சீசனில் 7 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக, இவரது விக்கெட் எடுக்கும் சராசரி 12.56ஆக இருக்கிறது.
நாக் அவுட் போட்டிகளில் அசத்தல்
ஆகிப் நபி குறிப்பாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். ஓவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 4 விக்கெட்டுகளாகவது எடுத்துள்ளார்.
காலிறுதியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக 7/40, 5/70 என அசத்திய இவர் அரையிறுதியில் பெங்காலுக்கு எதிராக 5/87, 4/36 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார்.
இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து கோப்பைக்கு வித்திட்டுள்ளார். சொல்லப்போனால், நாக் அவுட்டில் மட்டுமே 26 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டிலும் அசத்தும் ஆகிப் நபி
41 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆகிப் நபி 156 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த 2018 முதல் லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடும் இவர் 2020 ஆம் ஆண்டு முதல் முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார்.
துலீப் கோப்பை 2025ல் ஒரே ஓவரில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ரஞ்சி கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். விரைவில் டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.