மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 195 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நவி மும்பையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம்
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளான அமெலியா கெர் 0 ரன்னிலும், கமலினி 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் நாட் ஷிவர் பிரண்ட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அற்புதமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். நாட் ஷிவர் பிரண்ட் 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 42 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். நிக்கோலா கேரி 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் நந்தனி சர்மா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சின்னலே ஹென்றி மற்றும் ஸ்ரீ சரணி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.