சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை (ஜனவரி 11) நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்கள் குவிக்கவுள்ள மூன்றாவது வீரர் என்ற சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா இருவர் மட்டுமே 28 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளனர். அந்த வரிசையில் விராட் கோலி மூன்றாவது வீரராக இடம்பெறவுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 556 போட்டிகளிலில் விளையாடியுள்ள விராட் கோலி, 27,975 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரராக மாற அவருக்கு இன்னும் 25 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
சங்ககாராவின் சாதனையை முறியடிப்பாரா?
சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது வீரராக மாறுவதற்கான வாய்ப்பும் விராட் கோலிக்கு பிரகாசமாக இருக்கிறது.
28,016 ரன்களுடன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். சங்ககாராவின் இந்த சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 42 ரன்களே தேவைப்படுகின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 34,357 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.