ஐபிஎல் தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், வீரர்கள் பலரும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி வருகின்றனர். சிலர் ஆரம்பக் கட்ட போட்டிகளில் மட்டும் விளையாட முடியாத சூழலில் உள்ளனர்.
காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், தற்போது காயம் காரணமாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் கடைசியாக ஆகாஷ் தீப் விளையாடியிருந்தார். அதன் பின், காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. அவருக்கு இன்னும் காயம் முழுமையாக குணமாகவில்லை எனவும், அவர் குணமடைவதற்கு இன்னும் 3 மாதங்கள் தேவைப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவும் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷித் ராணா, மதீஷா பதிரானா மற்றும் ஆகாஷ் தீப் இல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ள ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.