டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
இரு அணிகளுமே வெற்றி - தோல்வி கணக்கில் சமநிலையுடன் இருக்க, நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை ஒரு இடம் முன்னிலையில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் நிலைக்க, இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்குமே இருக்கிறது.
சென்னை அணியைப் பொருத்தவரை, நிலையான ஃபார்மில் இல்லாமல் வெற்றி, தோல்வி என ஒன்றையடுத்து ஒன்றாக சந்தித்து வருகிறது. இன்னும் ஒரு தோல்வி, பந்தயத்திலிருந்து வெளியேறும் நிலையை நோக்கி சென்னையை தள்ளிவிடும்.
Advertisement
அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சோபிக்காதது பின்னடைவாக இருந்து வந்த நிலையில், கடந்த ஆட்டத்தில் அரை சதம் கடந்து ஃபார்மை மீட்டெடுத்திருக்கிறார். ஏற்கெனவே சஞ்சு சாம்சன் நம்பகமான வீரராக நிலைத்து வரும் நிலையில், தற்போது ருதுராஜும் அவரோடு சேர்ந்ததால் அணிக்கு பலம் கூடுகிறது.
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக இணைந்திருக்கும் உர்வில் படேல் நிதானமாகத் தொடங்கியிருக்கும் நிலையில், கார்த்திக் சர்மா அரை சதம் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார். பெüலிங்கில் அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, ஜேமி ஓவர்டன் நிலையாக விக்கெட்டுகள் வீழ்த்துகின்றனர்.
டெல்லி அணியைப் பொருத்தவரை, ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு வெற்றியுடன் மீண்டு இந்த ஆட்டத்துக்கு வருகிறது. எனினும், சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 3 தோல்விகளை சந்தித்துள்ளதால், அந்த அணி இந்த ஆட்டத்தில் வெல்லும் முனைப்புடன் இருக்கிறது.
தொடக்க வீரர் பதும் நிசங்கா அபார ஆட்டத்துக்கு திரும்பியிருப்பது அணிக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. வழக்கம்போல் கே.எல்.ராகுல் ரன்களுக்கு பெருவாரியாக பங்களிப்பார் என நம்பலாம். நிதீஷ் ராணா, ஆசுதோஷ் சர்மா ஆகியோரும் தொடர்ந்து கை கொடுத்தால் அணிக்கு பலம் சேரும்.
பெüலிங்கை பொருத்தவரை, காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய மிட்செல் ஸ்டார்க் முதல் ஆட்டத்திலேயே 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியிருக்கிறார். விக்கெட்டுகள் சரிக்கும் குல்தீப் யாதவ், டி.நடராஜன் ஆகியோர் ரன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏற்ற, இறக்கம் இருந்தபோதும், நிதானமாகச் செயல்படுகிறார் கேப்டன் அக்ஸர் படேல்.