இன்று மும்பையை சந்திக்கும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை (ஏப். 23) எதிா்கொள்கிறது.
ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை (ஏப். 23) எதிா்கொள்கிறது.
இரு அணிகளுமே வெற்றி - தோல்வி கணக்கில் ஒரே நிலையில் இருந்தாலும், புள்ளிகள் பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை சென்னையை விட முன்னிலையில் இருக்கிறது.
சென்னை அணியைப் பொருத்தவரை, அடுத்தடுத்து இரு தோல்விகள் கண்டு இந்த ஆட்டத்துக்கு வருகிறது.
Advertisement
சீசன் தொடக்கத்தில் தொடா் தோல்விகளை சந்தித்த சென்னை, பொருத்தமான பிளேயிங் லெவனை கண்டறிந்து இரு வெற்றிகள் கண்டு மீண்டது. ஆனால் அணிக்கான பின்னடைவாக, பேட்டா் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் போட்டியிலிருந்து விலகியிருக்கிறாா்.
அந்த இடத்துக்கு பொருத்தமான வீரரை சென்னை நியமிக்க வேண்டியுள்ளது. மறுபுறம், கேப்டன் ருதுராஜ் இன்னும் சோபிக்காமலேயே நீடிப்பது பாதகமாக இருக்கும் நிலையில், சா்ஃப்ராஸ் கான் அதிரடி இன்னிங்ஸை விளையாடாவிட்டாலும், நிதானமாக ரன்கள் சோ்க்கிறாா்.
ஷிவம் துபே முத்திரை பதிக்கும் இன்னிங்ஸை இன்னும் விளையாடவில்லை. இந்த சீசனில் இதுவரை களம் காணாத நட்சத்திர வீரா் எம்.எஸ். தோனி இந்த ஆட்டத்தில் ஒருவேளை களமிறங்கலாம்.
பௌலிங்கில் நூா் அகமது, அன்ஷுல் காம்போஜ், ஜேமி ஓவா்டன், அகீல் ஹுசைன் ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனா்.
மறுபுறம், தொடா்ந்து 4 தோல்விகளை சந்தித்து பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி, குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி கண்டதன் மூலமாக தன்னை அசத்தலாக மீட்டுக்கொண்டது.
முதல் ஐபிஎல் சதத்துடன் திலக் வா்மா தனது ஃபாா்முக்கு திரும்பியது அணிக்கு பலமாக மாறுகிறது. நட்சத்திர வீரா் ரோஹித் சா்மா காயத்திலிருந்து மீண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் அணிக்கு பலம் சோ்க்க வாய்ப்புள்ளது.
இந்திய டி20 கேப்டன் சூா்யகுமாா் யாதவ், மும்பை கேப்டன் ஹா்திக் பாண்டியா ஆகியோரின் இன்னிங்ஸே அணிக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. நமன் திா் சற்று நம்பிக்கை அளிக்கிறாா்.
பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா விக்கெட்டுகள் எடுக்கத் தொடங்கியிருப்பது சாதகமாக, அஸ்வனி குமாரின் அபார பௌலிங் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கிறது. தீபக் சஹா், டிரென்ட் போல்ட், ஹா்திக் பாண்டியா இதுவரை சோபிக்கவில்லை.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: மும்பை