முகப்பு
கிரிக்கெட்

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

பழைய தலைமுறைதான் சிறந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக விராட் கோலி விளையாடியதாக அவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டியுள்ளார்.

விராட் கோலி - படம் |ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

பழைய தலைமுறைதான் சிறந்தது என்பதை நிரூபிக்கும் விதமாக விராட் கோலி விளையாடியதாக அவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராய்பூரில் நேற்று (மே 13) நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விராட் கோலியின் அசத்தலான சதத்தினால் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 60 பந்துகளில் 105 ரன்கள் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Advertisement

Advertisement

சுனில் கவாஸ்கர்

இந்த நிலையில், தன்மீது சந்தேகப்பட்டவர்களை தனது அதிரடியான சதத்தினால் விராட் கோலி அமைதிப்படுத்தியுள்ளதாகவும், பழைய தலைமுறை வீரர்களே இன்னும் சிறந்த வீரர்களாக இருப்பதையும் அவர் நிரூபித்துவிட்டதாகவும் சுனில் கவாஸ்கர் அவரைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விராட் கோலி மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சேஸிங்கில் எப்படி விளையாட வேண்டும் என்பதை வீரர்கள் பலரைக் காட்டிலும் அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசன் அடுத்த தலைமுறைக்கான ஐபிஎல் சீசன் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, மூத்த வீரரான விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் விளாசியுள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் மற்றும் பாபர் அசாமுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் கோலி உள்ளார். அவர் டி20 வடிவிலான போட்டிகளில் இதுவரை 10 சதங்கள் விளாசியுள்ளார். அவர் டி20 போட்டிகளில் அதிவேகமாக 14000 ரன்களைக் கடந்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 9 சதங்கள் விளாசியுள்ளார். சாதனைகள் படைக்கப்படுவது முறியடிக்கப்படுவதற்காகவே. ஆனால், விராட் கோலியின் சாதனைகளை முறியடிக்க ஒருவருக்கு அதிக காலம் தேவைப்படும் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 484 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஹென்ரிச் கிளாசன், சாய் சுதர்சனுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் கோலி உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian captain Sunil Gavaskar has praised Virat Kohli, stating that he played in a manner that proved the older generation is indeed the best.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments