பாகிஸ்தான் அணிக்கு 40% அபராதம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியைத் தழுவியது.
Advertisement
இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி நாளை (மே 16) காலை ஷில்ஹெட் திடலில் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தொடரில் கட்டாயம் வெற்றி பெறும் சூழலில் பாகிஸ்தான் அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதல் போட்டியில் மெதுவான ஓவர் ரேட் விகிதத்தில் பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு 40 சதவிகிதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உள்பட தொடர் என்பதால், தொடருக்கான 8 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 புள்ளிகளுடன் இருந்த பாகிஸ்தான் அணி, தற்போது வெறும் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
வீரர்கள் மற்றும் வீரர்களுடன் பணியாற்றுபவர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் கீழ், பந்துவீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களுக்கு அவர்களின் போட்டி சம்பளத்தில் இருந்து ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கள நடுவர்களான ரிச்சர்ட் கெட்டில்பரோ, குமார் தர்மசேனா, 3-வது நடுவர் அல்லாவுதீன் பலேகர், 4-வது நடுவர் காசி சோஹேல் ஆகியோர் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.