ஜாம்பவான்கள் முதல் ஆட்டம்: 15-இல் ஸ்பெயின்-போர்ச்சுகல் மோதல்
உலக கோப்பை 2018-இல் ஜாம்பவான் அணிகள் மோதும் முதல் ஆட்டமாக 15-ஆம் தேதி ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை 2018-இல் ஜாம்பவான் அணிகள் மோதும் முதல் ஆட்டமாக 15-ஆம் தேதி ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.
வரும் 14-ஆம் தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மாஸ்கோவில் தொடங்குகின்றன. துவக்க ஆட்டத்தில் ரஷியா-சவுதி அரேபிய அணிகள் மோதுகின்றன.
இதன் தொடர்ச்சியாக கால்பந்து ஜாம்பவான்களின் முதல் ஆட்டமாக ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் 15-ஆம் தேதி சோச்சியில் நடக்கிறது. இதுவரை உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் ஒருமுறை கூட தகுதி பெறாத நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பி உள்ளது. கடந்த 2016 யூரோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஊக்கத்தில் போர்ச்சுகல் அணி இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது.
அதே நேரத்தில் 2010-ஆம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி கடந்த 2014 உலகக் கோப்பையில் நெதர்லாந்து, சிலி போன்ற அணிகளிடம் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. நிகழாண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதின் மூலம் ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.
2010-இல் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமான ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பெயின் அணிக்காக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் ஆட உள்ளார்.
அதே நேரத்தில் 5 முறை தங்கக் காலணி விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும். பல்வேறு கிளப் சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்துள்ள அவருக்கு இதுவரை உலக சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் மொராக்கோவும், ஈரானும் தகுதிச் சுற்று ஆட்டங்களில் திடீர் ஆச்சர்ய வெற்றிகளை குவிக்கும் வாய்ப்பும் உள்ளது.