4-ஆவது கோப்பை யாருக்கு? 150 இலக்கை எட்டிப்பிடிக்குமா சிஎஸ்கே!
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் ஆடுகிறது.
2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பொல்லார்டு 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 41* ரன்கள் எடுத்தார். டி காக் 4 சிக்ஸர்களுடன் 29 ரன்களும், இஷான் கிஷன் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்தனர். சென்னை தரப்பில் தீபக் சஹர் 3, ஷர்துல் தாகூர் 2, இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2010, 2011, 2018 ஆண்டுகளில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் ஆடுகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்ததில் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.