சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸியும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனாவின் லேசான அறிகுறிகள் இருந்தாலும் தில்லியில் உள்ள தங்கும் விடுதியில் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்றாவது நபர், ஹஸ்ஸி. இதற்கு முன்பு பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜியும் பேருந்துப் பராமரிப்பாளரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் அனைவரும் தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
முன்னதாக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வீரா்கள் வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகியோருக்கும், சென்னையின் பந்துவீச்சுப் பயிற்சியாளா் எல்.பாலாஜிக்கும் கரோனா உறுதியான நிலையில், தில்லி கேபிடல்ஸ் வீரா் அமித் மிஸ்ரா, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வீரா் ரித்திமான் சாஹா ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.