ஐபிஎல் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த வருடம் 35 ஆட்டங்களின் முடிவில் 380 மில்லியன் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள். கடந்த வருடத்தை விடவும் (35 ஆட்டங்களின் முடிவில்) 12 மில்லியன் பார்வையாளர்கள் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.