ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.
ஆடுகளத்துக்கு ஏற்ப விக்கெட்டை இழக்காமல் நல்ல தொடக்கத்தை இருவரும் தந்தனர். பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, கொல்கத்தா பேட்டிங்கில் படிப்படியாக அதிரடி வெளிப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 79 ரன்கள் சேர்த்த நிலையில் வெங்கடேஷ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வந்த வேகத்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து 5 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கில்லும், ராகுல் திரிபாதியும் ரன் ரேட்டை உயர்த்தினர். கில் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அது பெரிய இன்னிங்ஸாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் திரிபாதியும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மார்கன் இறுதியில் சற்று ஸ்கோரை உயர்த்தினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் 14 ரன்களும், மார்கன் 13 ரன்களும் எடுத்தனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஷார்ஜாவில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.