பவர் பிளேவில் மிரட்டல்: டெல்லிக்குப் பிரித்வி; சென்னைக்கு ஹேசில்வுட்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பிரித்வி ஷா பவுண்டரிகளாக விளாச ஹேசில்வுட் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பிரித்வி ஷா பவுண்டரிகளாக விளாச ஹேசில்வுட் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 1 ஆட்டம் துபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் மோதுகின்றன.
டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் பிரித்வி அடக்கிவாசிக்க 3-வது ஓவரிலிருந்து தனது மிரட்டலைத் தொடங்கினார்.
தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி சென்னைக்கு நெருக்கடியளித்தார் பிரித்வி. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 4-வது ஓவரின் முதல் பந்தை தவானும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தினார் ஹேசில்வுட்.
5-வது ஓவரில் ஷர்துல் தாக்குர் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த ஓவரில் பிரித்வி இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டலைத் தொடர்ந்தார்.
இதனால், பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச மீண்டும் ஹேசில்வுட் அழைக்கப்பட்டார். இதற்குப் பலனளிக்கும் வகையில் ஷ்ரேயஸ் ஐயர் விக்கெட்டைக் கைப்பற்றினார் ஹேசில்வுட்.
பவர் பிளே முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.