பெங்களூருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு ப்ருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடி தொடக்கம் தந்தனர். 18 ரன்கள் எடுத்திருந்த ப்ருத்வி ஷா உமேஷ் யாதவ் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பாட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
முதலில் ஷிகர் தவான் தனது 36-வது பந்தில் அரைசதத்தை அடித்தார். ஆனால், அரைசதம் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமும் இழந்தார். அவரைத்தொடர்ந்து, சாஹல் ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரும் தனது அரைசதத்தை அடித்தார்.
ஆனால், அதே ஓவரில் ரிஷப் பந்த் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயரும் 52 ரன்களுக்கு அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். கோலின் இங்ரம் அடுத்தடுத்த பந்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார்.
குறுகிய நேரத்தில் 4 விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லி அணி ஃபினிஷிங்கில் சற்று திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்ஸர் படேல் மற்றும் ரூதர்ஃபோர்ட் அந்த அணிக்கு நல்ல ஃபினிஷிங்கை தந்தனர். குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதன்மூலம், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
ரூதர்ஃபோர்ட் 13 பந்துகளில் 28 ரன்களும், அக்ஸர் படேல் 9 பந்துகளில் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.