கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதன் எதிரொலியாக சிஎஸ்கே பயிற்சியும் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டது. கேப்டன் தோனி சொந்த மாநிலமான ராஞ்சிக்குத் திரும்பினாா்.
இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன என்பதற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ரா. ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
தோனி போன்ற ஒரு வீரருக்கு ஐபிஎல் எல்லாம் அளவுகோலாக இருக்காது. ஐபிஎல் போட்டியில் தோனி ரன்கள் எடுத்திருந்தால் எல்லா நிபுணர்களும் தோனியைத் தேர்வு செய்யவேண்டும் என்பார்கள். தான் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பவேண்டுமா என்பது தோனிக்குத் தெரியும்.
அவருடைய தேர்வுக்கு ஐபிஎல் ஒரு முக்கியக் காரணமாக இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணியில் மீண்டும் விளையாட அவர் விருப்பப்பட்டால், அவர் விளையாடத் தயாராக இருப்பார், அவரைத் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்ய நினைத்தால் தானாகத் தேர்வு செய்யப்படுவார். ஏனெனில் அனுபவம் என்பது சூப்பர் மார்க்கெட்டில் கிடையாது.
மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் தோனி. இந்திய அணிக்கு அவர் தேவைப்பட்டால், ஐபிஎல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் மீண்டும் அணிக்குள் இடம்பிடிப்பார் என்று கூறியுள்ளார்.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.